Posted by superadmin in Latest News
- இலங்கையின் எல்.என்.ஜி. தொழில் நுட்பத்தை வியாபிக்கச் செய்வதற்கு கொரிய அரசாங்கத்தின் உதவி
- மின்சக்தித் துறையில் புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாக கொரியாவின் விஷேட கவனம்
எதிர்காலத்தில், இலங்கை அடங்கலாக முழு உலக நாடுகளுக்கும் ஏற்படக் கூடிய மின்சக்தி நெருக்கடிக்கு நிரந்தர தீர்வை காணும் அடிப்படை நோக்கில், கொரியாவின் தூதுவர் Lee Heon அவர்கள் மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை சந்தித்தார்கள்.
கடந்த தினம், இலங்கைப் பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இரண்டு நாடுகளுக்கும் விஷேடமான பல விடயங்கள் பற்றி இதன் போது நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற சனத்தொகை மற்றும் தொழில் நுட்ப அபிவிருத்திகள் என்பவற்றின் காரணமாக, உலகத்தில் மின்சாரத்திற்கான கேள்வி கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும், எம்மிடம் வளங்கள் மட்டுப்பட்டளவில் இருப்பதால், எதிர்வரும் ஒரு சில ஆண்டுகளில், எழக் கூடிய மின்சக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் நிச்சயம் ஒரு பிரச்சினை ஏற்படும் எனவும், அந்தப் பிரச்சினைக்குரிய நிலைமையிலிருந்து நாம் மீள வேண்டும் என்றால், நாம் இன்றிலிருந்தே நிரந்தர நிலையான தீர்வை காணுவதற்கு முனைய வேண்டும் எனவும் அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இதன் நிமித்தம், இலங்கை தற்பொழுது மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு நகர்ந்து வருவதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள், சூரிய சக்தி, காற்று சக்தி முதலிய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களினூடாக இலங்கை ஏற்கெனவே கணிசமான ஒரு அளவுக்கு அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் கூறினார்கள்.
மின்சார விநியோகத்தில், பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளை விடவும் இலங்கை முன்னிலையில் இருப்பதாக, இதன் போது கருத்துத் தெரிவித்த கொரியாவின் தூதுவர் குறிப்பிட்டார். இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வருகின்ற ஒரு நாடு மக்களின் உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் இந்த அளவு விஷேட கவனம் செலுத்துவது, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் அது மேற்கொள்ளும் ஒரு விஷேட கரும பணியாகும் எனவும், அதனால் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறுவதற்கும் மற்றும் அபிவிருத்திப் பாதையில் நகர்வதற்கும் வழி கிட்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். அதே போன்று, ஏற்கெனவே, இலங்கை பின்பற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மைய மின்னுற்பத்தி உபாயத்திட்டங்கள் தவிர, மின்னுற்பத்திற்கு எல்.என்.ஜி. எரிவாயு தொழில் நுட்பத்தை பிரயோகிப்பதிலுள்ள முக்கியத்துவம் பற்றியும் தூதுவர் இங்கு மேலும் தெளிவுபடுத்தினார்.
கொரியாவின் தூதுவரினது மேற்குறித்த கருத்துக்கள் தொடர்பில் நன்றியை தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள், தனது நாட்டின் தொழில்முயற்சிகள் மற்றும் மின்சக்தித் துறை என்பன தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகளுக்கு கொரிய அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும், அதனூடாக, கொரியாவுக்கும் மற்றும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வருகின்ற இராஜதந்திர உறவுகளையும், நட்புறவுகளையும் வலுப்படுத்த தான் எதிர்பார்ப்பதாகவும், இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளை கண்டறிந்து, தனது நாட்டில் முதலீடு செய்யுமாறு கொரிய அரசாங்கத்திற்கு தாராளமாக அழைப்பு விடுப்பதாகவும் கூறினார்கள்.