Posted by in Latest News
‘எமது பெரும் சக்தி பிள்ளைகளின் கல்வி. அன்று எமக்கு மின்சார வசதிகள் இருக்கவில்லை. நாங்கள் குப்பி விளக்குகளில்தான் படித்தோம். எமது பிள்ளைகள் குப்பி விளக்குகளின்றி, மின்சார ஒளியில் படித்து உயர் ஸ்தானங்களுக்குச் செல்வதை நாம் விரும்புகின்றோம். எமது கிராமங்களிலுள்ளவர்களுக்கு எப்பொழுதும் வயலில் மண்வெட்டியால் வெட்டுவதற்கு, மரங்களிலிருந்து பழங்களைப் பறிப்பதற்கு தேவையில்லை. எமது பிள்ளைகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கின்றது. அதற்குத் தேவையான பின்னணிச் சூழல் உருவாகியுள்ளது. எந்த ஒரு நபருக்கும் இன்று நாட்டின் ஜனாதிபதிப் பதவிக்கு வர முடியும் என்பதை மைத்திரிபால சிறிசேன நிறுபித்துக் காட்டியுள்ளார். இன்று எமது கிராமங்களிலுள்ள எந்த பிள்ளைக்கும் உலகத்தில் எந்த உயர் ஸ்தானத்திற்கும் செல்வதற்கான வழியைத் திறந்திருப்பது இந்தக் கம்பிகளினூடாகக் கிராமங்களுக்கு வருகின்ற மின்சாரம் தான்’ என மின்வலு சக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார். நேற்றைய தினம் புத்தள மாவட்டத்தின் ஆணமடுவத் தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற 02 மின்சாரத் திட்டங்களை மக்களின் பாவனைக்காகத் திறந்துவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரணவக்க,
‘2010 ஆம் ஆண்டு நான் மின்வலு சக்தி அமைச்சராக, அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற போது எமது அரசாங்கம் திட்டமிட்டிருந்தது 2018 ஆம் ஆண்டளவில் நாட்டில் மக்களுக்கு 100% வீத மின்சாரத்தை வழங்குவதற்கு. நாம் அதனை 2012 ஆம் ஆண்டில் அனைவருக்கும் மின்சாரம் என்ற தொணியில் ஒரு துரித கருத்திட்டமாக முன்னெடுத்தோம். ஈரானின் நிதி உதவியில்தான் இதனை மேற்கொள்ளத் திட்டமிட்டோம். எனினும், ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டதால் அதனை முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. இந்த ஆண்டு மின்சாரம் வழங்கப்படுவது இ.மி.ச. நிதியிலிருந்து. அரசாங்கத்திலிருந்து கடனோ, சலுகையோ கிடைப்பதில்லை. வடமேல் மாகாணத்தில் இன்று வரை 98% வீதமான மக்களுக்கு மின்சார வசதிகளை வழங்கியுள்ளோம். இன்று எஞ்சியிருப்பது பின்தங்கிய பிரதேசங்களே. நாம் கடந்த காலத்தில் பின்பற்றிய கொள்கைதான், ஒரு வீட்டிற்கு 2 இலட்சம் ரூபாவுக்கு அதிகம் செலவாகுமாயின், அதனைப் பிற்போடுவதற்கு. ஆயினும், இன்று நாம் அந்தத் திட்டத்தை மாற்றி அனைவருக்கும் மின்சாரத்தை வழங்குகின்றோம். இது ஹம்மில்லமண்டிய மின்சாரக் கருத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்கு மின்சாரத்தை வழங்குவதற்கு 440,000.00 ரூபா நிதியைச் செலவிட்டுள்ளோம். உங்களுக்கு அரசாங்கத்தால் பல சலுகைகள் கிடைத்திருக்கும். சமுர்த்தி, பசளை, குடிநீர் போன்ற நிவாரணங்கள். ஆயினும் ஒரு குடும்பத்திற்கு ஒரு போதும் 440,000 ரூபா நிவாரணம் கிடைத்திருக்காது. அது பெரும் அளவான நிதி. ஆகையால் நாங்கள் உங்களிடம் ஒன்றை எதிர்பார்க்கின்றோம். கிராமத்திற்கு மின்சாரம் கிடைத்தவுடன் கிராமவாசிகள் ஒன்றைச் செய்கின்றார்கள். அது தான் பல விளம்பரங்களுக்கு, உந்துதல்களுக்கு ஆளாகி, கடன்பட்டு சரி மின்சார உபகரணங்களை வீட்டில் குவிப்பது. மின்சாரத்தை வழங்கும் வரை இ.மி.ச. ஊழியர்கள் தென்படுவது தெய்வங்களைப் போல். ஆயினும் வீட்டில் மின்சாரப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால், பெருமளவான மின்சாரக் கட்டணம் வரும் போது அதே இ.மி.ச. ஊழியர்கள் மக்களுக்கு பேய்கள் போல் தென்படுகின்றனர்’ எனவும்,
‘இனிமேலும், நான் இந்த மக்களிடம் கேட்டுக்கொள்வது, மின்சார வசதிகள் கிடைத்ததும் மின்சார உபகரணங்களை வாங்கி வீட்டில் குவிக்காது, மின்சாரத்தை அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரம் பாவிக்குமாறு’ எனவும்,
‘அதே போன்று சிறு சிறு கைத்தொழில்களுக்கும் இந்த மின்சாரத்திலிருந்து பெரும் நன்மைகளும் சக்திகளும் கிடைக்கின்றன. அந்த நன்மைகளையும் சக்திகளையும் பயன்படுத்தி தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு பெட்டிக் கடையாக பலசரக்குச் சாமான்களை விற்பனை செய்கின்ற விற்பனை நிலையங்களை சுப்பர் மார்க்கெட்டுக்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அதில்லாமல் தொலைக்காட்சிக்கு முன்னால் அமர்ந்துகொண்டு, தேவையற்ற நிகழ்ச்சிகளைப் பார்த்து காலங்களைக் கடத்தாதீர்கள். இந்தக் கம்பி மார்க்கத்திலிருந்து வருகின்ற மின்சாரத்திலிருந்து உச்ச பயனைப் பெறுங்கள். நாங்கள் எதனையும் செய்வது பிள்ளைகளுக்காகவே. ஆகையால், அவர்களின் கல்விக்கு மின்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதே போன்று தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் மின்சாரத்தைப் பயன்படுத்துங்கள். மின்சாரத்தை சிக்கனமாகப் பாவித்து, நீங்களும், நாடும் வெற்றிபெறும் நிலைக்கு ஆகுங்கள்’ எனவும்,
‘அதே போன்று சட்டமுறையற்ற ரீதியில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. மின்சார ஆபத்துக்கள் வராமல் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஆபத்தானது. ஆகையால், மிகவும் கவனமான முறையில் மின்சாரத்தைப் பாவித்து, உங்கள் அனைவரினதும், உங்கள் பிள்ளைகளினதும் வாழ்க்கைக்கு ஒளியூட்டி, உலகத்தை வெற்றிகொண்டு, மின்சாரத்தைப் பொக்கிஷமாக ஆக்கிக்கொள்ளுங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன்’ எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பிரதேசவாசிகளும், அரசியல் பிரதிநிதிகளும், அரசாங்க ஊழியர்களும் அடங்கலாக பெரும்திறளான மக்கள் கலந்துகொண்டனர்.