Posted by in Latest News
மல்வத்து – அஷ்கிரி உபய விகாரதிபதி மகாநாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெறுகின்றார்.
மின்வலு சக்தி அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள், நேற்றைய தினம் தனது பதவியில் பணிகளை ஆரம்பித்ததுடன், தளதா மாளிகையின் மகாநாயக்க தேரரிர் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்காக கண்டி ஸ்ரீ தளதா மாளிகைக்குச் சென்றார்.
இந்தப் பயணத்தின் போது தளதா மாளிகைக்குச் சென்ற அமைச்சர், மல்வத்து அஷ்கிரி உபய விகாராதிபதி மகாநாயக்க தேரரை சந்தித்து அவரின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டார். கடந்த தேர்தலை நியாயமானதாக நடத்துவதற்கும், அதே போன்று தேர்தலுக்கு முன்னரும், அதன் பின்னரும் நாட்டினுள் வன்முறை நீங்கிய சமாதான சூழலை ஏற்படுத்துவதற்கு மகாநாயக்க தேரர் நல்கிய பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது எனவும், நாட்டைக் கூறுபோடுதல், ஒற்றுமையைச் சீரழித்தல், புலிகள் அமைப்பு மீண்டும் தலைதூக்குதல் என நாட்டினுள் பரவியிருந்த கனவு ரீதியான எண்ணங்களை மக்கள் மத்தியிலிருந்து ஒழிப்பதற்கு மகாநாயக்க தேரர் அவர்கள் வழங்கிய ஆலோசனைகள் பெரிதும் துணையாக அமைந்தன எனவும் அமைச்சர் ரணவக்க சுட்டிக்காட்டினார்.
மல்வத்து அஷ்கிரி மகாநாயக்க தேரரை சந்தித்து அவரின் ஆசிர்வாத்தைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், தனது கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர் அவர்கள்,
‘எமது முதன்மை நோக்கம் யாதெனில் எரிபொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தேவையற்ற வரிகளை நீக்கி, மக்களுக்கு சலுகைகளைப் பெற்றுக் கொடுப்பதாகும். தற்பொழுது உலக சந்தையில் எரிபொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். மக்களுக்கு அளித்த வாக்குறுதியின் பிரகாரம் எரிபொருட்களுக்கு புதிய ஒரு விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படும். மின்சக்தித் துறையிலும் புதிய ஒரு அறவீட்டு முறையை அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் மக்களுக்கு தாம் ஏன் கட்டணங்களைச் செலுத்துவது என்ற காரணத்தை அறிந்துகொள்ள முடியும். அதே போன்று நிறுவனங்களில் புதிய ஒரு முகாமைத்துவ முறையையும் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்து மன்னார் கடல் பிரதேசத்தில் எண்ணெய் வளங்கள் பற்றிய அகழ்வு ஆய்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. மன்னாரிலிருந்து காலி வரையான கடலோரப் பகுதியில் எண்ணெய் வளங்கள் காணப்படுவதாக இந்த அகழ்வு ஆய்வுகளிலிருந்து கண்டறியப்பட்டது. இந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினால், இன்று நாட்டில் காணப்படுகின்ற பாரியளவான பல பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இது இரு பக்கங்களையும் வெட்டும் ஒரு ஆயுதம் போன்றதாகும் எனக் கூறியதுடன், கட்சி, நிற பேதமின்றி இந்த எண்ணெய் வளங்களை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் முன்வர வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார்கள்.
‘ஏற்கெனவே புதிய அரசியலமைப்புத் திருத்தத்திற்கான புதிய நகல் சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மக்களுக்கு சலுகைகளை வழங்கும் ஒரு வேலைத்திட்டமும் இந்த மாதம் இறுதியளவில் முன்வைக்கப்படவுள்ளது. கடந்த தேர்தலின் போது அரச அதிகாரம் சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்டது. அச்சுருத்தல்கள் விடுக்கப்பட்டன. எதிர்காலத்தில் இவ்வாறாக நிகழ்வுகள் ஏற்படாமலிருப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளர் பொறுப்புடன் செயல்படுவார். குறிப்பாக, கடந்த தேர்தலி்ன் போது மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டிருந்த தகாத ஊடகப் பாவனை மற்றும் தகாத முறையில் இராணுவத்தைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுதல் போன்ற சூழ்ச்சிகளுக்கு எதிராக அச்சமின்றி செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கும், பொலிஸ் மா அதிபருக்கும் நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கின்றோம்,
கடந்த காலத்தில் நிகழ்ந்த மோசடிகள் தொடர்பான தகவல்கள் தற்பொழுது சேகரிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இது தொடர்பில் அதிகளவான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த மோசடிகள், ஊழல்கள் என்பன பற்றி விசாரிப்பதற்கு ஒரு விஷேட பிரிவை நியமிக்க வேண்டும். ஒரு சில மோசடிகாரர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்ததால், அந்த ஊழல்களும் மோசடிகளும் மறைக்கப்படும் என மக்கள் மனதில் சந்தேகம் எழுகின்றது. ஒரு போதும் அவ்வாறு நடப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. அரசியல்வாதிகளாக இருந்தாலென்ன, எத்தகைய தரங்களையுடையவர்களாக இருந்தாலென்ன, ஆட்சியை அமைப்பதற்கு உதவினாலும், உதவாவிட்டாலும், ஊழல்களுக்கும் மோசடிகளுக்கும் எதிராக சரியான முறையில் உரிய சட்டத்தைச் செயற்படுத்தி தண்டனை வழங்குவது அவசியமாகும். புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் சிலர், குறிப்பாக இந்த நாட்டிற்கு 36 டொன் வெடிபொருட்களைக் கொண்டுவந்து, ஸ்ரீ தளதா மாளிகையிலும் மற்றும் ஏனைய பல முக்கிய ஸ்தலங்களிலும் குண்டுகளை வெடிக்கச்செய்த, ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் கோட்டாபயவின் கைப்பிள்ளையாக வளர்ந்து வந்த குமரன் பத்மநாதனுக்கு விஷேடமான ஒரு நீதிமன்றத்தின் முன்னிலையில் தண்டனை வழங்கப்படும். அது பற்றி மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாங்கள் குமரன் பத்மநாதனுக்கு எதிராக செயல்படுவோம் என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன். எதிர்காலத்திலும் ஊழல், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் பற்றி அரசாங்கத்திற்கு அறியப்படுத்துமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்’ எனவும் குறிப்பிட்டார்.